தணிக்கையின் பரிமாணங்கள்
01 புதியவைகளை வரவேற்போம்.
வணக்கம் நண்பர்களே!
தணிக்கையாளருக்கான பத்து கட்டளைகள் என்ற கட்டுரையை தணிக்கை மலர் மூலமாக உங்களுடன்
பகிர்ந்து கொண்ட பின்னர் தணிக்கை மலர் என்ற
சிறப்பு மிக்க ஊடகத்தின் மூலம் தொடர் கட்டுரை ஒன்று எழுதவேண்டும் என்பது எனது நீண்ட
கால ஆர்வமாக இருந்தது. எனினும் இம்மாதிரி ஒரு கட்டுரையைத் துவக்கும்போது எந்த தலைப்பில்
எவ்வாறு எழுதுவது? அதன் நோக்கம் மற்றும் அணுக வேண்டிய விவரங்கள் என்ன? அவைகளுக்கு என நாம்
வகுத்துக் கொள்ளவேண்டிய எல்லைகள் அல்லது வரையறைகளை எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதையெல்லாம் ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டிய
தாயிற்று.
தணிக்கையை பற்றியும்,
அதில் நாம் சந்திக்கும் பல்வேறான பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். பிரச்சினைகள் நேரும் போது
எதிர்கொள்வதும், அவைகள் நேராமல் தவிர்ப்பதும் ஆலோசிக்கப் படவேண்டும். புதிய பரிமாணங்கள், புதிய நடைமுறைகளை ஆர்வமுடன்
ஏற்றுக் கொள்ளவும், அவைகளை ஆராய்ச்சி பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் நடைமுறைப்
படுத்தவும் அனைவரும் முன்வரவேண்டும். காலம், வளர்ச்சி, சூழ்நிலை அனைத்தையும்
அனுசரித்து நமது பணிகளைச் செம்மைப் படுத்தவும் செயல் படுத்தவும் ஊக்கம் அளிக்கப் படவேண்டும்.
நமது பணிகளை நேர்மையுடனும், துணிவுடனும் செயலாக்கம்
செய்ய பழக்கப் படவேண்டும். இவைகள் அனைத்தையும்
மனதில் இறுத்தி முயன்று பார்க்கலாம் என்பது தான் ஒவ்வொரு தணிக்கையாளரின் இதயத் துடிப்பாக
இருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக
என்னை எண்ணிக்கொண்டு தான் இதைத் தொடங்குகிறேன். சின்னக் குழந்தை நடை பயில்வதைப் போன்றது
தான் எனது முயற்சி .
பரிமாணமா அல்லது பரிணாமமா?
தலைப்பினை தேர்வு செய்வதில் எனக்கு ஒரு கணம் தெளிவின்மை தோன்றி மறைந்தது. இதை தணிக்கையின் பரிணாமம்
(Evolution of Audit) என்று துவக்கலாமா அல்லது தணிக்கையின் பரிமாணம் (Dimension of Audit)
என்று துவக்கலாமா? எந்த தலைப்பை ஏற்றுக் கொண்டால்¢
எழுதும் எல்லைகள் அகன்றதாக இருக்கும்? என்பதை நிலைநிறுத்திப்
பார்த்த போது தணிக்கையின் பரிமாணம் என்பது தான் சரியானதாகத் தோன்றியது. பரிமாணம் என்பது அதன் பன்முக வளர்ச்சியைக் குறிப்பதோடு அல்லாமல்
அதன் அளவு கோல்களையும் வரையறை களையும் தெளிவாகக் குறிப்பிடும் சிறப்புச் சொல்லாக அமைகிறது.
ஆனால் பரிணாமம் என்று சொன்னால் தேவை நோக்கிய வளர்ச்சி அல்லது தணிக்கையின் கதை என்று மட்டுமே பொருள்பட்டு எழுதும் எல்லைகள் மிகவும்
சுருங்கிவிடும். மேலும் பரிணாமம் பொதுவாக ஒருமையில் பயன் படுத்தும் சொல். பரிமாணம்
என்பதோ பொதுவாக பன்மையிலேயே பயன்படுத்தப் பட்டு வருகிறது.
தணிக்கையின் பரிமாணங்கள்
முதலாவதாக தணிக்கையின் பரிமாணங்கள் என்பதை நாம் எவ்வாறு
எடுத்துக் கொள்ளலாம்
என்பதைப் பார்ப்போம்.
பரிமாணம் (Dimension) என்ற சொல்லுக்கு அளவுகள்
என்பது பொதுவான பொருள் ஆகும். முப்பரிமாணம் என்றால் நீளம் அகலம் ஆகியவற்றுடன் கனமும் சேர்ந்த அளவாகும் என்பதை நாம் அறிவோம்.
அருகருகே உள்ள இரண்டு கண்களால் காணும்
இரு வேறு காட்சியை ஒருங்கிணைத்து மனித
மூளை பார்க்கும் போது அக்காட்சி நமக்கு மூன்றாவது பரிமாணத்தையும் புலப்படுத்திக் காட்டுகிறது. இதையே
3 D என்கிறோம்.நாம் இரண்டு கண்களைப் பெற்றதன் பயன்களில் இதுவுமொன்று. எனவே தான் 3 D காட்சிகளை எடுக்க இரண்டு
காமிராக்களை பயன் படுத்தி படம் எடுத்து ஒரே திரையில் தெரிய வைக்கிறார்கள். பரிமாணங்களைப்
பற்றி பெரும் அளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அறிவியலை நோக்கி சிறிது நகர்ந்து விட்டேன். மன்னிக்கவும்.
கூட்டுறவுத் தணிக்கையையும் முப்பரிமாணம் உடையதாக நாம் இப்போது வைத்துக் கொள்ளப்
போகிறோம். ஏனெனில் நாம் சாதாரணத் தணிக்கையிலிருந்து அதிகப் படியாக நகர்ந்து கூட்டுறவுக்
கொள்கைகளைச் செயல் படுத்துவதையும் தவணை தவறிய சொத்துக்களை பரிசீலனை செய்வதையும் மூன்றாவது பரிமாண மாக ஏற்றுக்
கொண்டு செயல்படுகிறோம்.
இனி நமது தணிக்கைப்
பணிக்கு வருவோம். நமது தணிக்கை நாம் நகர்ந்து வரும் பாதைகளின் படி கீழ்க்கண்ட மூன்று
படிகளைக் கொண்டதாக உள்ளது.
01. (எந்திர கதியில்?) சரிபார்ப்பு (Mechanical
checking)
02. பரிசீலனை மற்றும் பகுப்பாய்வு (Examination and Analisis)
03. முடிவுகளைத் தொகுத்தளித்தல் (Presentation
of results of audit)
சரியோ தவறோ இந்த மூன்று பணிகளையும் உள்ளடக்கியதாகத்
தான் நமது தணிக்கைப் பணி உள்ளது? இதில் எந்தப் பணி முக்கியமானது? நமது குறுகிய காலக்
கட்டத்தில் எதில் நேரம் அதிகம் செலவிடப் படவேண்டும்? என்பதில் தான் நம் கருத்துக்கள் வேறுபடுகின்றன.
ஆயினும் ஒன்றில் மட்டும் கடந்த சில வருடங்களாக மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனம்
நம்மிடையே உருவாகியுள்ளது என்பது உண்மையே.
அது என்னவெனில் மேற்¢கண்ட மூன்று படிகளில் இரண்டாவதாக உள்ள பரிசீலனை மற்றும் பகுப்பாய்வு மற்றும் மூன்றாவதாக உள்ள முடிவுகளைத் தொகுத்து அளித்தல் ஆகியவற்றில் நாம் தற்பொழுது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.
இதுவே இத் தருணத்தில் தேவைப் படும். மிகப் பெரிய மாற்றம் என்பதோடு பட்டயத் தணிக்கைக்கு ஈடுகொடுக்கும் மகத்தான வளர்ச்சி
என்றும் சொல்லலாம்.
01. சரிபார்ப்பு (Mechanical
Checking)
அனைத்துத் தணிக்கையாளர்களுக்கும் பழக்கமான
சொல் தான் இது. தணிக்கை பார்க்க வேண்டிய புத்தகங்களின் பதிவுகளை தொடர்புடைய ஆவணங்களுடன்
சரிபார்க்கும் பணி என்று இதைச் சுருக்கமாகச் சொல்லலாம். விரிவாக நோக்கும்போது தணிக்கையில்
சரிபார்த்தல் என்ற சொல் சட்டம்,
விதிகள்,
துணைவிதிகள் நிர்வாக பதிவாளர்களின் சுற்றறிக்கைகள் அனைத்துக்கும்
உட்பட்டு பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் பணி
என்றும் பொருள் படுகிறதல்லவா? நாம் இதனை தணிக்கை
செய்தேன் என்றோ, பரிசீலனை செய்தேன் என்றோ சோதனை செய்தேன் என்றோ அல்லது சரிபார்த்தேன் என்றோ எப்படி சொன்னாலும் நமது
பணி மேற்கண்டவற்றை உள்ளடக்கியது தான் என்பதை மறுப்பதற்கில்லை. நமக்குத் தெரிந்த வரையில்
நிறுவனங்களில் வரவு செலவுகள் பல்லாயிரம் மடங்கு அதிகரித்திருக்கும் தற்போதைய நிலையில்
தணிக்கைப் பணியில் அதிகமான நேரத்தை விழுங்கிவிடும் (time
consuming) பணியாகவும் மன உளைச்சலை (monotonous) விளைவிக்கும் பணியாகவும்
உள்ளதையும் யாரும் இங்கே மறுப்பதற்கில்லை.
இதற்குப் பொதுவான காரணங்கள் தான் யாவை?
- வரவு செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.
- நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு கணக்குகள் முறையாகப் பேணிப் பராமரிக்கப் படவில்லை.
- சரிபார்த்தல் பணிக்கு போதிய கால அவகாசம் இல்லை.
- மன உளைச்சலைத் தரும் இப்பணியில் எட்டப் படும் முடிவுகள் மட்டுமே தணிக்கையின் நோக்கத்திற்கு முழுமையாக ஈடு கொடுப்பவையாக இல்லை.
தணிக்கையாளர்கள் என்றாலே ஆரம்ப தேதி முதல் ஆண்டு முடிவு வரை அனைத்து புத்தகங்களையும்
ஆவணங்களையும் ஒன்று விடாமல் மாங்கு மாங்கென்று டிக் அடித்த பின்னர் தான் மூச்சு விடுவார்கள்
என்று காலங் காலமாக சொல்லி வந்த,
செய்து வந்த பணிகளுக்கு இப்போதைதேவைப்படும் காலம் ஒதுக்க முடியாமல்
போய் விட்டதே? இந்த நடைமுறை சரிதானா?
இதற்கு ஏதேனும் பாதுகாப்பு உள்ளதா? சிந்திக்க வேண்டிய
நேரம் இது.
அப்பன் குப்பன் சுப்பன் கதையில் சொன்னதை போன்று நமது தணிக்கைப் பணிகளிலும்
காலம் சார்ந்த அறிவையும் அளவு முறைகளையும் பயன் படுத்தவேண்டியது
அவசியமாக உள்ளது.
அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது 'நமது களமும் சூழ்நிலையும்'
பற்றியதாகும். நமது துறையின் களப் பணியாளர்களின் களம் கூட்டுறவுச்
சங்கங்கள். அங்கே தணிக்கை செய்வதற்கான சூழ்நிலைகள் எப்படி உள்ளன? விரிவாகப் பார்ப்போம்.